மறப்பதும் மன்னிப்பதும் தேவகிருபையே ..!!
- படித்ததில் ஆசீர்வாதமானது
- Apr 11, 2018
- 1 min read

தன் ஞாபகசக்தியை இழந்துகொண்டிருந்த ஒருவர், சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றார். பல சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அந்த மருத்துவர் அவரிடம் இன்னும் அதிகமாக நீங்கள் ஞாபகசக்தியை இழந்துவிடாதபடி, அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த அறுவை சிகிச்சையினால் நீங்கள் உங்கள் கண்பார்வையை இழந்துவிடும் அபாயமும் உண்டு என்றும் கூறினார். அறுவை சிகிச்சை அல்லது கண்பார்வை இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும்படி அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. திரும்பி வந்த மருத்துவரிடம் அந்த நபர், “நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறேன். எனது நினைவுகளை விட எனது கண்பார்வை முக்கியமானதாகும். நான் எங்கே சென்றிருந்தேன் என்பதை நினைவில் வைத்திருப்பதைவிட, நான் எங்கே செல்லுகிறேன் என்பதைப் பார்க்கவே விரும்புகிறேன்” என்று கூறினார்.
ஆம், அவர் எடுத்த முடிவு மிகச்சரியானதே! கடந்தகால நினைவுகளை விட எதிர்காலத்திற்காக அவர் எடுத்த முடிவு ஞானமானது! நம்மில் அநேகர் கடந்தகாலத் தோல்விகளையும் வாழ்வின் கசப்புகளை அனுபவங்களையும் மறந்து விடாமல் நினைவில் வைத்து சுயபரிதாபத்திற்குள்ளாகி நம்மையே நொந்துகொண்டு துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது நல்லதல்ல. மாறாக கடந்தகால கசப்புகளை எல்லாம் மறந்து இனிவரும் நாட்களைக் குறித்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
யோசேப்பின் வாழ்வு இதற்கு ஒரு நல்ல உதாரணம். தன் சகோதரர்களால் குழியிலே தள்ளப்பட்டு, எகிப்திற்கு விற்கவும் பட்டார். பின்நாட்களில் தேவன் அவரை உயர்த்தி, அவரது குடும்பத்தைக் கட்டி பிள்ளைகளைக் கொடுத்தார். இப்படி யோசேப்பு தன் முதல் பிள்ளையைப் பெற்றபோது, “என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார்” என்று சொல்லி அவனுக்கு மனாசே என்று பேரிட்டார். (ஆதி.41:51) கடந்த கால கசந்த நினைவுகளை மறந்து மன்னித்ததினாலே, பஞ்சகாலத்தில் தன்னைத் தேடிவந்த சகோதரர்களை மன்னித்து போஷிக்க முடிந்தது.
பிரியமானவர்களே! நாம் எவ்வளவு பிரயாசப்பட்டாலும் கடந்த காலத்தை நம்மால் மாற்றமுடியாது. ஆனால் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளமுடியும். இன்றைய தியானத்தின் மூலம் நீங்கள் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு அதிலிருந்து கற்றுக்கொண்டு, இன்றைய நாளை தழுவிக்கொள்ள வேண்டும். தேவதயவோடு முயற்சிப்போம். விடுதலையோடு வாழ்வோம்
Comments